Join Our Whats app Group Click Below Image

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - செப்.8-ல் ஆலோசனை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - செப்.8-ல் ஆலோசனை..!!

 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8-க்கு பிறகு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

9 முதல் 12 வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் 8 நாள்கள் வகுப்புகள் எப்படி செல்கிறது, வருகை பதிவேடு எப்படி இருக்கிறது, மாணவர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து கண்காணிக்க திட்டமிட்டு அதை கண்காணித்து வருகிறோம்.

தொடக்க பள்ளி என்பது மிகவும் முக்கியமானது.கரோனா கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சூழலில் அவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து என்ன முடிவெடுக்கலாம் என்பதை செப்.8 ஆம் தேதிக்கு பின்பு முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.

மாணவர்களுக்கு பரவலாக ஏதாவதொரு பள்ளியை தேர்ந்தெடுத்து கரோனா பரிசோதனை செய்ய கூறினோம். அப்படி செய்ததில் நாமக்கல் மாவட்டத்தில் 3 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இது போன்று என்ன என்ன பிரச்னைகள் 8 நாள்களில் வருகிறது என்பதையும் கண்காணித்து வருகிறோம். நிச்சயம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

ஆசிரியர்கள் தொடர்பாக 11 வகையான பிரச்னைகள் இருக்கிறது. அது தொடர்பாக பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வி துறையில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. ஆசிரியர்கள் பிரச்னைகள் குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் பிரச்னைகளை ஒவ்வொன்றாக தீர்க்க வழிவகை செய்யப்படும்.

தூய்மை பணியாளர்கள் இல்லாத பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை விரைவில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகள் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் கூடுதல் திறன் மேம்பாட்டிற்காக சில பள்ளிகள் கூடுதல் நேரம் எடுத்து கொண்டு பள்ளிகளை இயக்குகின்றனர். அவ்வாறு செய்வதில் தவறில்லை.மொத்தமாக 8 மணி நேரம் பள்ளிகள் இயங்குகிறது. மாணவர்கள் தாமதமாக வந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்க கூடாது. பள்ளிகளுக்கு வராமல் இருந்த மாணவர்கள் முதலில் பள்ளிகளுக்கு வர விடுங்கள் என கூறியுள்ளோம்.

தேசிய கல்வி கொள்கையில் உடன்பாடு இல்லாதவற்றை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். அந்த கல்வி கொள்கையில் தமிழ்நாட்டிற்கு தேவையானதை எடுத்து கொள்கிறோம். நகர்புற மாணவர்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் கிராமப்புற மாணவர்களும் பயன் பெறும் வகையில் தற்போது 'ஸ்போக்கன் இங்லீஷ்' வகுப்புகளை நடத்தி வருகிறோம்.

நல்லாசிரியர் விருது வழங்கியதில் எந்த குழப்பமும் இல்லை. அனைத்து கல்வி மாவட்டங்களுக்கும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே தொகுதியில் அதிகமான ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றியிருந்தால் அவர்கள் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகிறது.

பள்ளி கல்வித் துறைக்கு ரூ.1584 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை குறைவு என கூறமுடியாது. ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படாமல் இருந்தது. அதை அடுத்த ஆண்டு வழங்கும் வகையில் ஒத்திவைத்துள்ளோம்.அதன் மதிப்பே சுமார் ரூ.3000 கோடி வரும். நிதி நிலைமை சீராக இருந்த காலத்திலேயே கடந்த ஆட்சியில் ஆறு முறை அக விலைப்படி வழங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் இருந்தபோதும் பள்ளி கல்வித் துறைக்கு ரூ.32,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments